ஓம் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயம், ஸ்தாபாக் இன்று உடைபட்டது
கோலாலம்பூர், பிப்ரவரி 8 2010- இன்று காலை 9.00 மணியளவில் பக்தர்கள் தேவாரம் பாடி பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது ஆயர் பானாஸ், செதாபாக்-இல் அமைந்திருக்கும் ஓம் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டது. ஆலய தலைமை பொறுப்பாளர் ரவிசங்கரிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் பி.உதயகுமார் பிரதமர், கூட்டரசு பிரதேச அமைச்சர் மற்றும் கோலாலம்பூர் டத்தோ பண்டார் ஆகியோருக்கு இன்று ஆட்சேப கடிதம் எழுதினார். இந்த ஆட்சேப கடிதத்தில் செக்ஷன் 295 பினேல் கோட்டின் கீழ் (ஒரு மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் ஒரு கோவிலை உடைப்பதோ அல்லது இடிப்பது), செக்ஷன் 296ன் கீழ் (ஒரு சமய கூட்டத்திற்கு தொந்தரவு கொடுத்தல்) மற்றும் 298ஏ (சுபீட்சமின்மை, ஒற்றுமையின்மை, பகையுணர்ச்சி, வெறுப்பு அல்லது மத அடிப்படையிலான ஒற்றுமை அல்லது சுபீட்சத்தை தக்க வைப்பது) போன்றவை ஒரு கிரிமினல் குற்ற செயலாகும் என்று அக்கடிதத்தில் பி.உதயகுமார் சுட்டிக் காட்டினார். மேலும் ரவிசங்கர் இச்சம்பவம் குறித்து செந்தூல் காவல் நிலையத்தில் சென்று இன்று புகார் செய்துள்ளதாக அறிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் மலேசியாவைத் தவிர உலகில் வேறு எந்தப் பகுதியிலும் நிகழவில்லை என்று பி.உதயகுமார் தெரிவித்தார். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் இனி எந்த இந்து கோவிலும் உடைபடாது என்ற வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் கொடுத்திருந்தாலும் இன்னமும் கோவில்கள் உடைப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு தாம் மிகுந்த வேதனை அடைவதாக பி.உதயகுமார் பிரதம மந்திரி, கூட்டரசு பிரதேச அமைச்சர் மற்றும் கோலாலம்பூர் டத்தோ பண்டார் ஆகிய மூவருக்கும் இன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, எந்தவொரு பல இன கட்சி எனக் கூறிக் கொண்ட 82 எதிர்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் குறிப்பாக எதிர்கட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சம்பவம் தொடர்பாக கடுமையான ஆட்சேபம் ஏதும் எழுப்பவில்லை என்று வருத்தத்துடன் பி.உதயகுமார் தெரிவித்தார். இக்காரணத்தினால் கூட இந்து ஆலயங்கள் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக உடைபட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார். அக்கடிதத்தில் மேலும் அவர், பிரதமர் உடனே அரசாங்க தலைமை செயலாளர் டான் ஸ்ரி முகமட் சிடேக் ஆரசாங்க அதிகாரப்பூர்வ சுற்று அறிக்கை வெளியிட்டு இந்து கோவில்கள் உடைக்கப்படுவதை உடனடியாக தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கும்படியும் மலேசியாவிலுள்ள அனைத்து இந்து கோவில்களுக்கும் நிலப்பட்டா கொடுத்து அதனை உடனடியாக கேசட் செய்வதை உறுதி செய்யும்படியும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். இவ்வாறு செய்தால்தான் எதிர்காலத்தில் மற்ற எந்தவொரு இந்து கோவில்கள் உடைபடுவதிலிருந்து தடுக்க முடியும் என்றார் அவர்.











